வெளிநாட்டவர்களுக்கான விசா கட்டணத்தை உயர்த்தியது ஜப்பான்!

வெளிநாட்டவர்களுக்கான விசா கட்டணங்களை ஜப்பான் அரசாங்கம் ஐந்து மடங்காக அதிகரித்துள்ளது.

கடந்த 50 ஆண்டுகளில் ஜப்பானில் விசா கட்டணங்கள் உயர்த்தப்படுவது இதுவே முதல் முறையாகும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தக் கட்டண உயர்வு எதிர்வரும் ஜூலை மாதம் 1 ஆம் திகதி முதல் உத்தியோகபூர்வமாக நடைமுறைக்கு வரவுள்ளது.

புதிய திருத்தத்தின்படி, ஒற்றை நுழைவு விசாக்களுக்கு தற்போது அறவிடப்படும் 3 ஆயிரம் யென் கட்டணமானது, ஜூலை 1 முதல் 15 ஆயிரம் யென் ஆக அதிகரிக்கப்படவுள்ளது.

பலமுறை நுழைவு விசாக்களுக்கு தற்போதுள்ள 6 ஆயிரம் யென் கட்டணமானது, 30 ஆயிரம் யென் ஆக அதிகரிக்கப்படவுள்ளது.

கடந்த 1978 ஆம் ஆண்டிற்குப் பிறகு மேற்கொள்ளப்படும் முதலாவது விசா கட்டணத் திருத்தம் இதுவாக அமைந்துள்ளது.

“நாட்டின் தற்போதைய பணவீக்கம் மற்றும் நாணய மாற்று விகித ஏற்ற இறக்கங்களை கருத்திற்கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது”
என ஜப்பான் வெளியுறவு அமைச்சர் தோஷிமிட்சு மொடேகி தெரிவித்துள்ளார்.

Exit mobile version