ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த இருவர் இலங்கைக்கு நாடு கடத்தல்!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் இருவர் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து நேற்றிரவு(13) இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.

பாதாள உலகக் குழுவின் முக்கிய உறுப்பினரான ‘மோதர நிபுண’ என்பவரின் சகோதரர் மற்றும் ‘புளூமெண்டல் சங்கா’ ஆகிய இருவருமே இவ்வாறு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.

இலங்கையில் பல்வேறு குற்றச் செயல்களோடு தொடர்புடைய இரு சந்தேக நபர்களும், சட்ட அமலாக்கப் பிரிவினரிடமிருந்து தப்பிப்பதற்காக அபுதாபியில் மறைந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், மத்திய கிழக்கு போர்ச் சூழலில், ஈரானால் தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட ட்ரோன்கள், விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் ஆகியவற்றுன் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை கைபேசிகளில் வைத்திருந்த குற்றத்திற்காக அபுதாபி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதனை தொடர்ந்து இருவரையும் இலங்கைக்கு நாடுகடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதற்கமைய கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த சந்தேகநபர்கள் இருவரையும் விமான நிலைய குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் உடனடியாகக் கைது செய்து தீவிர விசாரணைக்கு உட்படுத்தினர்.

‘மோதர சத்துர’ விடம் விரிவான வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு நாரஹேன்பிட்டியிலுள்ள மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

‘புளூமெண்டல் சங்காவிடம் விமான நிலைய குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தொடர்ந்து தடுத்து வைத்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வாக்குமூலங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

இவர்களிடம் பெறப்படும் வாக்குமூலங்களின் அடிப்படையில், இலங்கையிலுள்ள இவர்களது ஏனைய சகாக்கள் மற்றும் போதைப்பொருள் வலைப்பின்னல்கள் குறித்தும் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version