யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியின் இடமாற்றம் நீதித்துறையை கேள்விக்குட்படுத்தியுள்ளது: இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு!

யாழ்ப்பாண முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதியின் திடீர் இடமாற்றம் வடக்கில் நீதித்துறையை கேள்விக்குட்படுத்தியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் நேற்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப செயலாளர் தீபன் திலீசன் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியாக இருந்த அலெக்ஸ் ராஜா, திடீரென பதுளைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்தப் பின்னணியில் அவர் கையாண்ட வழக்குகளே அதற்குக் காரணம் என யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கம் குற்றச்சாட்டியுள்ளது.

இந்த விடயம் தமிழ் மக்கள் மத்தியில் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன.

நீதித்துறையின் மேல் அடக்குமுறைகளை மேற்கொள்ளும் அரசின் போக்கை இங்கே காணக்கூடியதாக உள்ளது.

பருத்தித்துறை நகர சபை விவகாரம் மற்றும் வடக்கில் மேற்கொள்ளப்பட்ட முறையற்ற ஆசிரியர் இட மாற்றங்களை நீதியின் பக்கமாக அணுகியதாலேயே முன்னாள் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதிக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் தவறுகளை நீதித்துறை சுட்டிக்காட்ட முற்படும்போது அடக்க முனைவது ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் செயலாகும்” என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப செயலாளர் தீபன் திலீபன் குறிப்பிட்டார்.

Exit mobile version