வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் – வெளியில் உறவுகள் போராட்டம்: பொலிஸார் அடாவடி!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம், தேசிய ரீதியாக நிகழ்வு யாழ்.மாவட்டச் செயலகத்தில் இன்று (25) இடம்பெற்றது.

வலிந்து காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஏற்பாட்டி (OMP) இடம்பெற்ற இந்த நிகழ்வில், நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுலந்த, நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன்,ஜெ.றஜீவன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, வடக்கின் ஐந்து மாவட்டங்களின் அரச அதிபர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது இலவச கண் பரிசோதனை நிகழ்வு இடம்பெற்றதோடு, பார்வைக் குறைபாடுடையவர்களுக்கு உடனடியாக மூக்குக் கண்ணாடிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இதேவேளை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் யாழ்.மாவட்ட செயலக முன்றலில் இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

உள்ளே நுழைய முனைந்த போராட்டக்காரர்களை பொலிஸார் இழுத்து வெளியேற்றினர்.

Exit mobile version