
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே இந்த வாரம் எட்டப்பட்ட அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேல் விமர்சித்து வரும் நிலையில், அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் இஸ்ரேலுக்குக் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தம் ஈரானின் ஏவுகணைத் திட்டத்தைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது என்றும், இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது என்றும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.


இதற்குப் பதிலடி கொடுத்துள்ள ஜே.டி. வான்ஸ், தற்போதைய உலகச் சூழலில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மட்டுமே இஸ்ரேலின் ஒரே சக்திவாய்ந்த நட்புசக்தி என்பதை இஸ்ரேல் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய துணை ஜனாதிபதி வான்ஸ், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அமைச்சரவை உறுப்பினர்கள் டொனால்ட் டிரம்ப் மீதும், இந்த அமைதி ஒப்பந்தம் மீதும் தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்துவதை வன்மையாகக் கண்டித்துள்ளார்.
இஸ்ரேல் தனது பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தும் மூன்றில் இரண்டு பங்கு பாதுகாப்பு ஆயுதங்கள் அமெரிக்க மக்களின் வரிப்பணத்திலும், அமெரிக்கர்களின் கரங்களாலும் உருவாக்கப்பட்டவை என்பதை அவர் நினைவுபடுத்தியுள்ளார்.
அமெரிக்கா வருடந்தோறும் இஸ்ரேலுக்கு சுமார் 4 பில்லியன் டொலர் இராணுவ உதவியை வழங்கி வரும் நிலையில், தங்களின் உண்மையான பிரச்சினையை உணராமல் அமெரிக்க ஜனாதிபதியை இஸ்ரேல் அமைச்சர்கள் விமர்சிப்பது யதார்த்தமற்றது என்றும் அவர் சாடியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து இஸ்ரேல் பிரதமர் அலுவலகமோ அல்லது அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சகமோ இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





