
உக்ரைனின் பல்வேறு நகரங்கள் மீது ரஷ்யா ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைக் பயன்படுத்தி நடாத்திய தாக்குதல்களில் 14 பேர் உயிரிழந்துள்ளதோடு 117 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உக்ரைன் அரசின் தலைமை சட்டத்தரணி அலுவலகம் நேற்று (6) வெளியிட்ட தகவலின்படி, தலைநகர் கீவ் உள்ளிட்ட பல நகரங்களை இலக்காகக் கொண்டு இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
நள்ளிரவில் தொடங்கிய தாக்குதல்கள் பல மணிநேரங்கள் நீடித்ததாகவும், பல மாடிக் குடியிருப்புகள் மற்றும் கட்டட வளாகங்களில் தீப்பரவல் ஏற்பட்டு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குழந்தைகள் உட்பட பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கீவ் பிராந்திய இராணுவ நிர்வாகத் தலைவர் திமூர் த்காச்சென்கோ தெரிவித்துள்ளார்.





