வடக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில், உணவுத் திருவிழா: பழமையான வாகனப் பேரணி: பாரம்பரிய கலை நிகழ்வுகள் யாழில்!

வடக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில் சுற்றுலா, கலாசாரம் மற்றும் உணவு திருவிழா 2026 ஆகிய நிகழ்வுகள் கோலாகலமாக நேற்று (15) ஆரம்பித்து வைக்கப்பட்டன.
யாழ் முற்றவெளி மைதானத்தில் நேற்று (15) நண்பகல் 12 மணியளவில் உணவு திருவிழா ஆரம்பித்து வைக்கப்பட்டது.



இந்த உணவுத்திருவிழா நேற்று 15 முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணிவரை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



இதன்மூலம் வடக்கு மாகாணத்தின் பாரம்பரிய உணவுப் பண்டங்களை சுவைக்கும் சந்தர்ப்பத்தையும், கைவினைப்பொருட்களை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தையும் வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகம் ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.



இதேவேளை, வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் ஏற்பாட்டில், “பழமையான வாகன பேரணி”(Vintage Vehicle Parade)யாழ் நகரில் நேற்று (15) பிற்பகலில் இடம் பெற்றது.
யாழ்ப்பாணம் பொது நூலகத்திலிருந்து ஆரம்பித்த “பழமையான வாகன பேரணி” யாழ் பிரதான தபாலக சுற்றுவட்டம் ஊடாக பயணித்து பண்ணை வழியாக முற்றவெளியில் நிறைவடைந்தது.



அதனைத் தொடர்ந்து தமிழர் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையிலான பல்வேறு கலை நிகழ்வுகள் யாழ். முற்றவெளி மைதானத்தில் இடம்பெற்றன.
இந்த நிகழ்வில், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன்,
நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன், ஆகியோர் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.





