செம்மணியில் நேற்றும் 10 என்புக் கூடுகள் அடையாளம்: அகழ்வு பணிகள் நாளையுடன் தற்காலிக நிறைவு!

யாழ்ப்பாணம் செம்மணி, சிந்துப்பாத்தி மனிதப் புதைகுழியிலிருந்து 10 என்புக் கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 09 என்புக் கூடுகள் நேற்று (17) அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி சிந்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வின் 3 ஆம் கட்டத்தின் 54 ஆவது நாள் அகழ்வுப் பணி நேற்று இடம்பெற்றது.



இதன்போதே குறித்த என்புக் கூடுகள் இனங்காணப்பட்டதோடு அகழ்ந்தும் எடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் செம்மணி சிந்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வின் 3 ஆம் கட்ட அகழ்வுப் பணிக்கு யாழ்.நீதவான் நீதிமன்றம் 56 நாட்கள் வழங்கியிருந்த நிலையில் நாளைய (19) தினத்துடன் அகழ்வுப் பணிகள் நிறைவடையவுள்ளன.


மேலும், இதுவரை செம்மணி மனித புதைகுழியில் 3 கட்டங்களிலும் மொத்தமாக 108 நாட்கள் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதற்கமைய 572 என்பு கூடுகள் மொத்தமாக இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதோடு ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 565 என்புக் கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





