செம்மணி மனித புதைகுழி அகழ்வு இன்றுடன் தற்காலிக இடைநிறுத்தம்: மீண்டும் ஜூலை 15 ஆரம்பம்!

யாழ்.செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்றுடன் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு, எதிர்வரும் யூலை மாதம் 15ஆம் திகதியளவில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.
செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் கடந்த ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி ஆரம்பமாகி 09 நாட்கள் நடைபெற்ற முதலாம் கட்ட அகழ்வு பணிகளின் போது, 19 மனித என்புகூடுகள் மீட்கப்பட்டன.
அதனை அடுத்து இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி வரையிலான 45 நாட்கள் நடைபெற்ற அகழ்வு பணிகளின் போது , முதலாம் கட்டத்தில் அகழ்ந்து எடுக்கப்பட்டு 19 என்பு கூடுகள் உட்பட 240 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டன.



இந்த நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக 53 நாட்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 12நாட்கள் நடைபெற்று கடந்த மே மாதம் 09ஆம் திகதி வரையில் 21 என்பு கூடுகள் மீட்கப்பட்ட நிலையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
அதன் அடிப்படையில் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களில் மீட்கப்பட்ட என்பு கூடுளுடன் சேர்ந்து 261 என்பு கூடுகள் மீட்கப்பட்டன.
அந்தநிலையில் மூன்றாம் கட்டத்தின் இரண்டாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த ஜூன் மாதம் ஆரம்பமாகி இன்றுடன்(24) 22 நாட்கள் இடம்பெற்ற நிலையில், தற்காலிகமாக அகழ்வு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் யூலை 15ஆம்திகதியளவில் மீண்டும் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
அதன் அடிப்படையில் முதலாம் , இரண்டாம் கட்டங்கள் மற்றும் மூன்றாம் கட்டத்தின் இதுவரையிலான 32 நாட்கள் முன்னெடுக்கப்ப அகழ்வு பணிகளில் 412 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 409 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





