
லெபனான், சிரியா மற்றும் காஸா ஆகிய இடங்களில் இராணுவ நடவடிக்கைகளின் மூலம் தாங்கள் கைப்பற்றிய இடங்களிலிருந்து இஸ்ரேல் இராணுவம் பின்வாங்காதென அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி, ஈரான்-அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேலின் இந்தக் அறிவிப்பு பிராந்தியத்தில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘லெபனான் மீது நாங்கள் மேற்கொள்ளும் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் எங்களைத் தாக்க முற்பட்டால் அந்நாட்டை நோக்கி இஸ்ரேல் மிகக் கடுமையான முறையில் பதில் தாக்குதல் தொடுக்கும்’ எனவும் இஸ்ரேல் காட்ஸ் எச்சரித்துள்ளார்.
கடந்த இரண்டரை ஆண்டுகளில் லெபனான், சிரியா, காஸா பகுதிகளில், சுமார் 1,000 சதுர கிலோமீற்றர் பரப்பளவை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
இந்தக் கட்டுப்பாட்டை காலவரையின்றி நீடிப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
மறுபுறம், அமெரிக்காவுடனான போா் நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனான் ஒரு பிரிக்க முடியாத அங்கம் என ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடா்பாளா் தெரிவித்துள்ளார்.
வரைவு ஒப்பந்தத்தில் அனைத்து முனைகளிலும் போரை முடிவுக்குக் கொண்டு வருவது மற்றும் லெபனான் குறித்து மூன்று தடவைகள் வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





